Tuesday, 18 June 2013

ஒரு சிறிய பழுப்புநிறப் பாம்பு


ஒரு சிறிய பழுப்புநிறப் பாம்பு
வில்லியம் ஸரோயன்
தமிழில் : வையவன்

மே மாதத்தில் ஒரு பார்க் வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது அவன் ஒரு சிறிய பழுப்புநிறப் பாம்பைப் பார்த்தான். அது புல்வெளி வழியாக இலைகளினூடே அவனை விட்டு நழுவி ஓடிற்று. அவன் கையில் ஒரு நீளமான குச்சியை எடுத்துக் கொணடு, மனிதர்களுக்கே உரிய ஊரும் பிராணிகளின் மீதுள்ள பீதியை உணர்ந்தவாறே அதைப் பின்தொடர்ந்தான்.
, இதுதானே பாவத்தைக் குறித்து மனிதர்களாகிய நாம் போட்டு வைத்திருக்கும் இலச்சினை என்று எண்ணியவாறே அவன் தன் கையிலிருந்த குச்சியால் அந்தப் பாம்பைத் தொட்டான். அது நெளிந்தது. பாம்பு தலையைத் தூக்கிப் பார்த்துக் குச்சியை ஒரு தடவை சீறியடித்தது. பின்பு பீதியோடு புல்லினூடே வேகமாக ஓடிற்று. அதைப் பின்தொடர்ந்தான்.
அது மிகவும் அழகாக இருந்தது. பிரமிக்கத்தக்க விதத்தில் புத்திக் கூர்மையோடு காணப்பட்டது. ஆனாலும் அவன் அதை மேலும் ஒருக்கணம் கவனித்து அதைக் குறித்து மேலும் ஏதாவது கண்டறிய விரும்பினான்.
அந்தச்சிறிய பழுப்புப் பாம்பு நேராக அவனை பார்க்குக்கு உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அதனால் வெளிப்பார்வைக்குத் தெரியாமல் அவன் வெகு உள்ளே போய்விட்டான். பாம்பைத் தொடர்ந்து செல்லும் இந்த வேலையில் பார்க்கின் சட்ட திட்டங்களில் எதையோ அத்துமீறி விட்டமாதிரி ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவனைக் கண்டு யாராவது கேள்வி கேட்டால் என்னசொல்வது என்று அவன் ஒருபதில் தயாரித்துக் கொண்டான்.
நிகழ்வியல் ஒழுக்கவியலில் நான் ஒரு மாணவன். இப்படிச் சொல்லலாமா, இல்லை, நான் ஒரு சிற்பி. ஊரும் ஜந்துக்களின் உடலமைப்பைக் குறித்துப் படித்து வருகிறேன், இப்படிச் சொல்லலாமா என்று யோசித்தான்.
எந்த விதத்திலாவது ஒரு பொருத்தமான விளக்கத்தை அவன் கொடுத்தாக வேண்டும். பாம்பைக் கொல்ல உத்தேசித்ததாக அவன் சொல்லக் கூடாது.
பீதியுற்ற அந்த ஜந்துவின் பின் அவன் தாண்டிக் குதித்தும்,  வேகமாக நகர்ந்தும், போய்க் கொண்டிருந்தான். கடைசியில் அந்தப் பாம்பு களைத்து விட்டது. அதனால் மேலும் நகர முடியவில்லை. குந்துகால் போட்டு உட்கார்ந்து அந்தப் பாம்பைக் குச்சியினால் தூக்கி உற்றுக் கவனித்தான். அதைக் கையினால் தொடப் பயமாக இருக்கிறது என்ற விஷயத்தை அவன் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான்.
ஒரு பாம்பைத் தொடுவது என்பது மனிதனின் மனத்திலுள்ள ரகசியத்தைத் தொடுவதற்கு நிகர் என்று அவனுக்குத் தோன்றிற்று.  வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் கூடாத ஒரு விஷயம். அந்த வழவழப்பான நழுவலும், அந்தப் பீதியூட்டும் மௌனமும்தான் ஒரு காலத்தில் மனிதன். அந்த மனிதன்தான் இன்றைக்கு இந்தக் கடைசிப் பரிணாம கதியை எட்டியிருக்கிறான். இருந்தாலும் இன்றைக்கும் பாம்புகள் பூமியின் மீது அப்படி ஒரு மாற்றம் எந்தக் காலத்திலும் ஏற்படாதது மாதிரி உலவித் திரிகின்றன.
முதல் மனுஷனும் மனுஷியும், பைபிள் கூற்று, பரிணாமம், ஆதாமும் ஏவாளும் மனித கர்ப்பம். அவன் மனம் இதையெல்லாம் எண்ணிற்று.
அந்தப் பாம்பு அழகானது, சுத்தமானது, சற்றுக் கம்பீரமானது, கச்சிதமானது. அந்தப் பாம்பின் பீதி அவனை அச்சுறுத்திற்று. அவன் முகம் பயத்தினால் வெளுத்துப் போயிற்று. அந்தப் பார்க்கிலுள்ள சகல பாம்புகளும் நிதானமாக இந்தச் சிறிய பழுப்புப் பாம்பை அவனிடமிருந்து மீட்பதற்காக வரக்கூடும்; வந்து தங்கள் சபிக்கின்ற மௌனத்தோடும் தங்கள் உருவத்தின் பயங்கர வகைகளோடும் அவனைச் சூழ்ந்து கொள்ளும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.
அது ஒரு பெரிய பார்க். அங்கே நிச்சயம் ஆயிரக் கணக்காக பாம்புகள் இருக்கும். எல்லாப் பாம்புகளும் அவன் இந்தச்சிறிய பாம்பின் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் எல்லாம் சேர்ந்து அவனை லேசில் வெலவெக்கச் செய்து விடும்.
அவன் எழுந்தான். சுற்றிலும் கவனித்தான். எல்லாம் அமைதியாக இருந்தது. அந்த மௌனம் பைபிளில் சொல்லப்பட்ட உலகம் ஆரம்பமான அந்தக் காலத்துக்கு நிகராகத் தோன்றியது. ஒரு குட்டையான புதரின்மீது கிளையிலிருந்து கிளைக்கு ஒரு பறவை தாவிக் கொண்டிருப்பதை அவன் கவனித்தான். ஒரு பெரிய நகரத்தின் பப்ளிக் பார்க்கில் தான் நின்று கொண்டிருப்பதையே அவன் மறந்து விட்டான். ஏரோப்ளேன் ஒன்று அவன் தலைக்கு மேலே பறந்து சென்றது. அந்த ஓசையை அவன் கேட்கவும் இல்லை. அதைப் பார்க்கவுமில்லை. அந்த மௌனம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அவனுக்கு முன்னாலிருந்த பாம்பின் மீதே அவன் கவனம் கூர்மையாகப் பதிந்து போயிருந்தது.
அவன் மீண்டும் குந்துகால் போட்டுக் கொண்டு பாம்போடு மௌனமாக உரையாடத் தொடங்கினான். உள்ளுக்கும் வெளிக்கும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் சுய உருவத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் தனக்கு வெளியே கண்ணெதிரில் ஒரு பாம்பின் உருவத்தைப் பார்க்கும் விஷயம் அவனுக்கு வெகு தமாஷாகப் பட்டது. உண்மையில் அது ஒரு மகத்தான விஷயம்தான். ஆரம்பத்தில் அவன் உரக்கப் பேசுவதற்குப் பயப்பட்டான். நேரமாக ஆக அவனுக்குக் கிலி குறைந்தது. அவன் அதனோடு இங்கிலீஷில் பேசத் தொடங்கினான். அவன் பாம்போடு பேசுவது ரொம்ப இன்பமான விவகாரம்.
ஆல்ரைட்... இதோ நான் ஓர் இளைஞன். இத்தனை வருஷங்களுக்கு அப்பால், இதே பூமியின்மீது இதே சூரியனின் கீழே ஒரே வகையான ஆவலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதோ நீ என் முன்னால் நிற்கிறாய். சூழ்நிலையும் ஒரே மாதிரி இருக்கிறது. நீ என்ன செய்வதாக உத்தேசம்? தப்பியோடப் போகிறாயா?  நான் விடமாட்டேன். உன் மனதில் என்ன ஓடுகிறது?  நீ எப்படி உன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாய்?  உன்னை நான் அழிக்க விரும்புகிறேன். அது மனிதனுக்குச் செய்ய வேண்டிய உபகாரம்.
பாம்பு அவன் எதிரில் வேறு வழயின்றி குச்சிக்குத் தப்பிக்க முடியாமல் நடுங்கிற்று. பலதடவை அது குச்சியைக் கடித்துக் கடித்துப் பார்த்தது. பிறகு அதைப் பொருட்படுத்த முடியாதஅளவு மிகவும் களைத்து விட்டது. அவன் குச்சியை இழுத்துக் கொண்டான். பாம்பு நன்றி சொன்ன மாதிரி அவனுக்குப் பட்டது.
அவன் பாம்பை நோக்கி விசிலடிக்கத் தொடங்கினான்சங்கீதம் பாம்பை ஆடவைக்கிறதா என்று காண.
யு அர் மை ஒன்லி லவ்,” அவன் விசிலடித்தான். அது ஷுபர்ட் ஒரு நியூயார்க் மியூசிகல் காமெடிக்காக அமைத்தது. மை ஒன்லி லவ் மை ஒன்லி லவ். ஆனால் பாம்பு நடனமாடவில்லை.
ஏதாவது இத்தாலியில் பாடுவோமா?  அவன் லாடோன்னா ஈ, மொபைல் பாட ஆரம்பித்தான். வேண்டுமென்றே தனக்கு வேடிக்கையாக இருக்கட்டும் என்ற நோக்கத்தோடு தப்பு தப்பாக உச்சரித்தான். பயனில்லை. அவன் ஒரு பிராம்ஸின் தாலாட்டை ஆரம்பித்தான். அதுவும் பாம்பை ஒன்றும் செய்யவில்லை. அது மிகவும் களைத்துப் போயிருந்தது. பயந்து போயிருந்தது. அங்கிருந்து நகர்ந்தால் போதுமென்று காணப்பட்டது.
திடீரென்று தன்னைக் குறித்து அவனுக்கே ஒரு வியப்புத் தோன்றியது. அந்தப் பாம்பை நழுவித் தப்பியோடி தன் உலகத்திற்குப் போக அனுமதிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவன் ஏன் அதைத் தப்பியோட அனுமதிக்க வேண்டும்?
அவன் ஒரு பெரிய கல்லைத் தரையிலிருந்து எடுத்தான். இப்போது உன் தலையை இந்தக் கல்லால் நசுக்கி நீ சாவதை நான் பார்க்கப் போகிறேன்.
அந்தத் தீய கம்பீரத்தை அழிப்பதுஅந்த பாவகரமான அழகை நசுக்கி விடுவதுஅந்த விஷயம் விசித்திரமாக இருந்தது. அவன் ஓங்கிய கரத்திலிருந்து கல்லை விட இயலாமல் இவ்விதம் தான் நடந்து கொள்வதற்காக வருந்தத் தொடங்கினான். கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு  வருந்துகிறேன் என்று முனகினான் அவன்.
என்னை மன்னித்துக் கொள். இப்போது உன்மீது எனக்கு அன்பு மட்டுமே இருக்கிறது.
அவன் தன்கையால் அந்தப் பாம்பைத் தொட்டுப் பார்க்க விரும்பினான். அதைப் பிடித்து, அதன் ஸ்பரிசத்தைப் புரிந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அது கடினமாக இருந்தது. பாம்பு அஞ்சி நடுங்கிற்று. ஒவ்வொரு தடவை அவன் கைகளை நீட்டும் போதும் அது அவன்மீது சீறிப் பாய்ந்தது.
உன் மீது எனக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. பயப்படாதே. உன்னை நான் துன்புறத்தப் போவதில்லை என்று அதைப் பார்த்துக் கூறினான். பின்பு வேகமாகத் தரையிலிருந்து அந்தப் பாம்பை உயர்த்திப் பிடித்தான். அதன் உண்மையான ஸ்பரிசத்தை அறிந்து கொண்டதும் அதைக் கீழே போட்டான்.
இப்போது உண்மை புரிகிறது. ஒரு பாம்பு சில்லென்று ஆனால் சுத்தமாக, நான் நினைத்ததுபோல் பிசுபிசுப்பாக இல்லாமல் கிடக்கிறது, என்று அவன் சொல்லிக் கொண்டான்.
அவன் பாம்பைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
இப்போது நீ போகலாம். பரிசோதனை முடிந்து விட்டது. இன்னும் நீ உயிருடன் இருக்கிறாய். ஒரு மனிதன் முன்னால் நீ வந்தாய். இருந்த போதிலும் நீ உயிருடன் இருக்கிறாய். நீ போகலாம்.
ஆனால் பாம்பு போகவில்லை. அது பயத்தினால் களைத்துப் போயிருந்தது. அவனுக்குத் தான் செய்த காரியத்தைக் குறித்து ஆழ்ந்த வெட்கமாக இருந்தது; தன் மீதே கோபம் வந்தது.
ஏசுவே! இந்தச் சின்னப் பாம்பை நான் நடுங்கச் செய்து விட்டேன். அது இதை மறக்கப் போவதில்லை. எப்போதும் என்னை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்,என்று எண்ணினான் அவன்.
கடவுளுக்காக நீ போய் விடு. உன் ஜாதியிடம் போய்ச் சேர். அவர்களிடம் போய், உன் சொந்தக் கண்களால் நீ பார்த்ததைச் சொல். உனக்கு என்ன தோன்றியது என்று சொல். மனிதனுடைய கரத்தின் நோய் பிடித்த வெப்பத்தைப் பற்றிச் சொல். மனிதனுடைய தோற்றத்தைக் குறித்து உனக்கு தோன்றியதைச் சொல், என்று பாம்பைப் பார்த்து அவன் சொன்னான்.
திடீரென்று பாம்பு அவனிடமிருந்து திரும்பி வேகமாக நெளிந்தவாறே நகரத் தொடங்கிற்று.
ரொம்ப நன்றி என்றான் அவன்.
அந்தச் சிறிய பாம்பு தன்னை முன்னால் தள்ளிக் கொண்டு புல்லினூடும் இலைகளினூடும் நகர்ந்து செல்வது அவனுக்கு ஆனந்தமான சிரிப்பைக் கொடுத்தது.
அற்புதம் என்றான் அவன். அவர்களிடம் சீக்கிரம் போ. மனுஷனின் முன்னால் நீ நின்றாய்; இருந்தும் கொல்லப்படவில்லை. அதை அவர்களிடம் சொல். மனிதனையே பார்க்காமல் வாழ்ந்து மடிந்து போகும் பாம்புகளைக் குறித்துச் சிந்தித்துப்பார்,  உன் வாய்ப்பு எத்தனை உன்னதமானது என்பதை யோசி. அவனிடமிருந்து நகர்ந்து செல்லும் பாம்பின் அசைவுகள் அவனுக்கு ஆனந்தச் சிரிப்பின் சாரமாகத் தோன்றியது. அவனுக்கு ஏகக்களிப்பு. அவன் வழிக்குத் திரும்பி, நடையைத் தொடர்ந்தான்.
ன்று மாலை பியானோவிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவள் இதமாக அதை வாசித்துக் கொண்டிருக்கையில் அவன் சொன்னான்.
ஒரு தமாஷான விஷயம் நடந்தது. அவள் வாசித்துக் கொண்டே கேட்டாள், தமாஷான விஷயமா?” ஆமாம், நான் பார்க் வழியாக நடந்து போகும்போது ஒரு சிறிய பழுப்புப் பாம்பைப் பார்த்தேன்.
அவள் வாசிப்பதை நிறுத்தினாள். பியானோ பெஞ்சிற்குப் பின்புறமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
பாம்பா? எவ்வளவு விகாரமான ஜந்து?” என்று கேட்டாள்.
இல்லை. அது அழகாக இருந்தது. என்றான் அவன்.
அதை என்ன செய்தீர்கள்?”
ஒன்றுமில்லை. அதைச் சும்மா பிடித்தேன். கொஞ்ச நேரம் அதைப் போகவிடவில்லை.
ஏன்?”
எந்தப் பொருத்தமான காரணமுமில்லை.
அவள் எழுந்து அறைக்குக் குறுக்கே நடந்து வந்து அவனருகே உட்கார்ந்தாள். அவனை விசித்திரமாக உற்றுப் பார்த்தாள்.
அந்தப் பாம்பைப் பற்றி எனக்கும் சொல்லுங்கள், என்று கேட்டுக் கொண்டாள்.
அது ரொம்ப அழகாக இருந்தது. கொஞ்சமும் விகாரமானதல்ல. அதைத் தொட்டுப் பார்த்தேன். சுத்தமாகத்தான் இருந்தது.
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்புறம் என்ன?” என்று இடைமறித்தாள் அவள்.
நான் பாம்பைக் கொல்ல விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை. அது ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது.
சந்தோஷம், அப்புறம் நடந்தது எல்லாவற்றையும் சொல்லுங்கள்.
அவ்வளவுதான் என்றான் அவன்.
இல்லை. எனக்குத் தெரியும். அது அவ்வளவு மட்டும் இல்லையென்று. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுங்கள்.
அது வேடிக்கையான விஷயம். நான் பாம்பைக் கொல்லப் போனேன். அப்புறம் இங்கே வரக்கூடாதென்று முடிவு செய்தேன்.
உங்களைப்பற்றி உங்களுக்கே வெட்கமாக இல்லை?” அவள் கேட்டாள்.
ஆமாம்.
அப்புறம் என்ன?  பாம்பு உங்கள் எதிரில் இருந்த போது என்னைப்பற்றி என்ன நினைத்தீர்கள்?”
உனக்குக் கோபம் வரும்
ஓ நான்சென்ஸ், உங்களோடு கோபித்துக் கொள்வது முடியாது. சொல்லுங்கள்?”
நல்லது நீ அழகாக இருக்கிறாய், அதே சமயத்தில் தீயவளாகவும் இருக்கிறாய் என்று நினைத்தேன்.
தீயவளா?”
பார்த்தாயா, உனக்குக் கோபம் வருமென்று நான் சொல்லவில்லை?”
அப்புறம்?”
நான் பாம்பைத் தொட்டுப் பார்த்தேன். அது சுலபத்தில் முடியவில்லை. ஆனாலும் நான் அதைக் கரங்களால் பற்றித் தூக்கினேன. இதைக் கேட்டு நீ என்ன நினைக்கிறாய்? நீ இம்மாதிரி விஷயங்களைக் குறித்து ஏராளமான புத்தகங்களைப் படித்திருக்கிறாய். இதற்கு... நான் பாம்பைப் பிடித்துத் தூக்கியதற்கு... என்ன அர்த்தம்?
அவள் மிருதுவாக, புத்திசாலித்தனமாகச் சிரிக்கத் தொடங்கினாள். ஏன்?” அவள் சிரித்தாள். இதற்கு நீங்கள் ஒரு முட்டாள் என்றுதான் அர்த்தம். ஏன், இது ரொம்ப அற்புதம் என்றாள்.
ஃப்ராய்ட் இப்படித்தான் சொல்கிறானா?” என்று கேட்டான் அவன்.
ஆமாம் அவள் சிரித்தாள். ஃப்ராய்ட் இப்படித்தான் சொல்கிறார்
எப்படியோ பாம்பை சுயேச்சையாகப் போக விட்டது அருமையாக இருந்தது.
எப்போதாவது நீங்கள் என்னைக் காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களா?”
உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே. உன்னிடம் சொன்ன விஷயங்கள் ஓரிரண்டு எனக்கு ஞாபகமில்லை.
இல்லை. நீங்கள் என்னிடம் சொன்னதில்லை.
அவள் சிரிக்கத் தொடங்கினாள். அவனைப் பற்றி அவளுக்குத் திடீரென்று சந்தோஷம் உயர்ந்தது.
நீங்கள் எப்போதும் வேறு விஷயங்களைக் குறித்து, கதைக்குதவாத விஷயங்களைக் குறித்துப் பேசி வந்திருக்கிறீர்கள், மிகவும் அபூர்வமான நேரங்களில் கூட, அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்.
இந்தப் பாம்பு ஒரு சின்ன பழுப்புப்பாம்பு, என்றான் அவன்.
அதுவே விளக்கிவிட்டது. நீங்கள் எப்போதும் தலையிடுகிற ஆசாமியல்ல.
ஓ... நீ என்ன பேச்சுப் பேசுகிறாய்?”
நீங்கள் பாம்பைக் கொல்லாதது குறித்து எனக்குச் சந்தோஷம், என்றாள் அவள்.
அவள் பியானோவின் அருகே போனாள். பியானோ கட்டைகளில் தனது கைகளை மிருதுவாக வைத்தாள்.
பாம்பிடம் நான் சில பாட்டுக்களை விசிலடித்தேன். ஷுபர்ட்டின் முற்றுப்பெறாத சிம்பொனியிலிருந்து ஓர் அடியை நான் விசிலடித்தேன். எனக்கு அதைக்கேட்கப் பிரியமாக இருக்கிறது. உனக்குத் தெரியுமா, அந்தப் பாட்டு பிளாஸம் டைம் என்ற மியூஸிகல் காமெடியில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப்பகுதி என்ன தெரியுமா? யூ ஆர் மை ஒன்லி லவ்... மை ஒன்லி லவ்... (நீ தான் என் ஒரே காதலி... ஒரே காதலி.)
அவள் மிருதுவாக வாசிக்கத் தொடங்கினாள். அவனது கண்கள் தனது கூந்தலின் மீது, கைகளின் மீது, கழுத்தின் மீது, முதுகின் மீது, கரங்களின் மீது படுவதை உணர்ந்து கொண்டே, அவன் பாம்பைப் பரிசீலித்தது போன்று தன்னையும் பரிசீலிக்கிறான் என்று உணர்ந்த படியே அவள் மிருதுவாக வாசிக்கத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment