Saturday, 7 June 2014

வசன இலக்கியம்.-1

பசவண்ணா 

1.  இதோ பார், உலகம் அலையாக விம்மி எழுந்து என் முகத்தின் மீது வீசுகிறது.
    ஏன் அது என் இதயம் வரை எழவேண்டும், சொல்.
    ஏன் அது என் தொண்டை வரை உயர்ந்து வரவேண்டும் சொல் 
    பிரபோ ,  ஒன்று என் தலைக்கு மேலே உயரும்போது எப்படி எதையும்                   உன்னிடம் சொல்வேன் ?
    பிரபோ , பிரபோ , என் கூக்குரல்களைக் கவனி!

    ஓ , கூடல சங்கம தேவா!

 2. நான் ஒவ்வொரு நாளும் சந்திரனைப்போல் ஒவ்வொரு 
     இலக்கமாக ஒளியைக் கூட்டி வந்தேன்.
     இந்த மலைப்பாம்பு உலகம், எல்லாம் விழுங்கும் ராகு, 
     என்னை விழுங்கிவிட்டது 
     இன்று என் சக்தி கிரஹணம் ஆகி மறைந்துவிட்டது 
    விடுதலை  எப்போது?ஓ , கூடல சங்கம தேவா!
   
 3. பிதாவே! என் அறியாமையால் நீ என்னை எதிர்பாராத    உலகங்களில்  அன்னையின் கருவறைக்குள் 
  கொண்டுவந்தாய்.
   பிறப்பது என்பதே   ஓ , பிரபோ, ஒரு பிழையா?
   முன்பு ஒருதரம் பிறந்துவிட்டதற்காக என் மீது இரக்கம் காட்டு.
    நான் வாக்களிக்கிறேன், கூடலசங்கமா தேவா,
    மீண்டும் நான் பிறக்க மாட்டேன் 
   


No comments:

Post a Comment